Listen 3D Quality

திங்கள், 2 ஜூலை, 2012

கோட்டு சூட்டு காந்தி!



கோட்டு சூட்டு காந்தி!


பாலிஸ்டர் வாங்குமிடத்தில்
பல்லில்லாத கதராடை காந்தி
பணமாய்  சிரிக்கிறார்!
கோட்டு சூட்டு வாங்குகிறோம்
கோவணம் கட்டிய
காந்தியை கொடுத்து!
எளிமையான காந்தி
பணக்காரர்களின் பாக்கெட்டை
நிரப்பி சிரித்துக்கொண்டு!
கோவணம் கட்டியவன்
கைகளில் காந்தி இருப்பதில்லை
காந்தி இல்லாததால்
அவனும் சிரிப்பதில்லை!



சனி, 30 ஜூன், 2012



அதிசயம் பார்க்கிறேன்!


காரிருள் வந்ததென்று
உன் கருங்கூந்தல் கண்ட குருவி
மதி மயங்கி
உன் கூந்தலோரம் கூடு கட்டும்
அதிசயம்  பார்க்கிறேன்!



திங்கள், 25 ஜூன், 2012



மண(ம் ) மகிழ்ச்சி!



கொடியை விட்டு பிரித்தெடுத்தபோதும்
நாங்கள் கூப்பாடு போடவில்லை!
ஊசிவைத்து குத்தி கோர்த்த போதும்
எங்கள் உறுதி குலையவில்லை!
நூலால் நெருக்கி எம் கழுத்தை இறுக்கிய போதும்
நாங்கள் கதறி அழுததில்லை!
தலையில் வைத்து கொண்டாடிய போதும்
நாங்கள் தலைக்கனம் கொள்ளவில்லை!
காலில் போட்டு கசக்கிய போதும்
நாங்கள் கவலைக் கொண்டதில்லை!
சாமிக்கு அருகாமையில் சமர்ப்பனமாயிருக்கிறோம்
சாவுக்கு அருகாமையில் சங்கமிக்கிறோம்
உங்கள் வாழ்வில் மணம் வீசிக்கொண்டிருக்கிறோம்
மரணத்திலும் மனமாறாதிருக்கிறோம்
மகிழ்ச்சி குறையாமல்,முக மலர்ச்சியாய்!

இப்படிக்கு,
மலர்கள்..





சனி, 23 ஜூன், 2012



திறந்தமனது பெண்கள்!


 இப்போ..
இரண்டு சக்கர வாகனங்களில்
எதிர்ப்படும் பெண்களெல்லாம்
நான் சிறுவயதில் படித்த
மாயாவிக்கதையை
நினைவுப்படுத்திப் போகிறார்கள்!

முகமூடித் திருடர்களை
திரும்ப திரும்ப
ஞாபகப்படுத்த வருகிறார்கள்!

திருட்டுப்பார்வை
உள்ளே ஒளிந்திருக்கிறது
மார்பு திறந்திருக்கிறது
துப்பட்டா முகத்தை மூடி
முகமூடி ஆகி இருக்கிறது!



திங்கள், 18 ஜூன், 2012



சொக்க வைக்கிறது பூமி!


என்னையும் அறியாமல்
எட்டிப்பார்க்கின்றன கண்கள்!
ஊர் பெயரை பார்க்கும் போதே
உரிமை கொண்டாடாடுகிறது வாய்!
மண்ணை மிதிக்கும் போதே
மலரும் நினைவுகளில் மகிழ்கிறது  மனது!
சொல்லொண்ணா சுகம் நிரப்பி
சொக்க வைக்கிறது 
என்னும் போதே எங்கள் பூர்வீக பூமி!



செவ்வாய், 12 ஜூன், 2012



தலை(வி)அனை மந்திரம் !


மதர்ந்த முலைகளுடன்
அவள் தெரிந்தாள்
தூரத்தே நின்று ஓரப்பார்வையால்
என்னை உற்று நோக்கினாள்
அவள் அருகாமையில்
வருவதுபோல் எனக்குத் தோன்றியது
அவ்வளவு சீக்கிரம்
அது நடந்தேறும் என நான்
சற்றும்  எதிர்ப் பார்த்திருக்கவில்லை
முழுதும் முடிந்(த்)து எழுந்தேன்
கனவு கலைந்திருந்தது!
அருகாமையில் என் தலையணை
நனைந்திருந்தது!



திங்கள், 11 ஜூன், 2012



விண்ணைத்தாண்டி !


ஏறிப் பறித்திடும் வரையில்
எல்லாமே எட்டாக் கனிதான்!
எகிறி பிடித்திட
வானம் கூட உன்  கைப்பிடிதான்!



சனி, 9 ஜூன், 2012



எம் உலகமாகினாய்!


உன்னிடம் உதை வாங்கியபோதும்
மகிழ்ந்துகொள்கிறேன்
உன் நகக்கீரல் படும் போதெல்லாம்
என் நெஞ்சம் நிறைகிறேன்
நீ கடித்து வைத்த காயத்தை
விழுப்புண் என்கிறேன்
உன் மூத்திரத்தால் என் முகம் நனைய
விழித்து சிரிக்கிறேன்
நீ தந்தை என்ற ஸ்தானம் தந்து
எம் உலகமாகினாய்!








செவ்வாய், 5 ஜூன், 2012



நிர்வாணமாகும் போது !


நிர்வாணமாகும் போது
குரலும்,கூச்சமும்
நிர்வாணமாகிப்  போகிறதோ!
குளியலறைக்கும்,குரலுக்கும்
என்ன சம்பந்தம்
எல்லோரையும்   குயிலாக்கி
பார்க்கிறதே!



திங்கள், 4 ஜூன், 2012



உனக்கும் எனக்குமான உறவு


நேற்றுவரை உனக்கும் எனக்குமான
உறவு நீட்டித் திருந்தது!
அன்று உன் முகம் பார்க்க
பசுமையாய் இருந்தது
உன் வாசத்தில் நான்
வசப்பட்டவனாய் இருந்தேன்
கனியின் ருசி சுவைத்து
மயங்கிக் கிடந்தேன்
உன் மடியில் படுத்து
தென்றல் வருட இளைப்பாறினேன்
கிளையென உன் கரம் பற்றி
தாவினேன் கட்டியணைத்தேன்!
என் மரமே, காலத்தின் நீட்சி
புதியதாய் கட்டிடம் கட்ட வந்தவன்
உன்னை வெட்டி எடுத்து விட்டான்!



சனி, 2 ஜூன், 2012



ரகசியம் !



அளவுக்கதிக அன்பை பொழிந்து
என்னைக்  கொல்கிறாய்!
எல்லைக்கடந்த ஊடல் செய்தும்
என்னைக்  கொல்கிறாய்!
நீ தேவதையாகி ராட்சசியாகும்
ரகசியம்
கொஞ்சம் சொல்லிச் செல்லடி!



செவ்வாய், 29 மே, 2012



நம்ப வைக்கிறது மூளை!


எழுத்துகள் ஆழமாக வேண்டுமென்று
என் எண்ணம் சொல்கிறது
அதன் சொல் கேளாமல்
மேலோட்ட சிந்தைகளை சிதறி
எழுதி முடிக்கிறது கைகள்
ஏனோ தானோவென்று
வார்த்தை சேர்ப்பை கோர்த்து  முடித்து
இதுதான் கவிதை என்று
என்னை ஏமாற்றி
நம்ப வைக்கிறது  என் மூளை!



திங்கள், 28 மே, 2012



உழைக்காமல் வியர்வை!

 
உழைக்கும்போது வியர்வை
வருவதில்லை
உழைக்காமலே
வழிகிறது வியர்வை
மாநகரப் பேருந்து கூட்ட நெரிசல் !



சனி, 26 மே, 2012



புரியவில்லை காதல்?


சந்தோசத்  தருணத்தை விடவும்
சண்டைத் தருணங்கள் அதிகமாகின்றன!
அன்பானவளாய் தெரியும் அதே நேரத்தில்
சைக்கோவாகியும் தொலைக்கிறாய் !
இனிக்க முத்தமிட்டு விட்டு
என்னை கசப்பாக்கி பார்ப்பதேனோ !
வலிப்பெற பெற
பொலிவிலக்கிறதா இல்லை வலிமைப்பெறுகிறதா
புரியவில்லை காதல்?



செவ்வாய், 22 மே, 2012



நீ கோபித்துக்கொள் !

நீ கோபித்துக் கொள்ளும்
போதெல்லாம்
நான் மகிழ்ந்து கொள்கிறேன்!
உன்னை தேற்றுகிற சாக்கில்
இறுக்கி அணைத்து
இனிக்க முத்தம் தரும்
இன்னொரு வாய்ப்பை 
எனக்கு அருள்கிறாயே என்று!



திங்கள், 21 மே, 2012



மூன்றெழுத்தில் மூச்சு!



அம்மா உன் கரங்கள்
அன்பொழுக அணைக்கிறது!
குழந்தையின் முதல் குரல்
உன்னையே அழைக்கிறது!

மூன்றெழுத்தில் மூச்சுவிடுகிறது
உலகு..
அம்மா!

அன்னையே
அகிலத்தை நீ
வெளியில் கண்டதில்லை
என்னையே நீ
உன் உலகமாய் கொண்டாய்!

தாய்மைக்கு நிகராய்
நான் கண்டதில்லை
எங்கும்!
தாய்மையை போற்றும்
குலமே
தரணியில் ஓங்கும்!


(அன்னையர் தினத்தன்று சித்திரம் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான என் கவிதை!)



செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக