Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

சங்க இலக்கியம் + வொய் திஸ் கொலவெறி டி!


சங்க இலக்கியம் + வொய் திஸ் கொலவெறி டி!

லகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று...

யான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)

‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே...

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே...
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே...’’

என்று அழகாக குறளின் சாரத்தை திரைப்பாடலில் இறக்கி இருந்தார். ‌அந்தப் பொல்லாத கவிஞர் இதை மட்டுமா செய்தார்? ‘குறுந்தொகை’ நூலில் பதுமனார் என்ற புலவர் பாடியுள்ள இந்தப் பாடலில்...

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே

தலைவன் பொருள் தேடச் சென்றதால் தனியே இருக்கும் தலைவி, ‘‘இதோ ஊர் முழுவதும் உறங்குகிறது. இரவுப்‌ பொழுதும் (நள்ளென்று எந்த ஒலியுமற்று) உறங்குகிறது. அனைத்து உயிர்களும் இனிமையாகத் துயில்கின்றன. இந்த உலகில் தூங்காதிருப்பவள் நான் ஒருத்தி மட்டுமே...’’ என்று பாடுவதாகப் பொருள். இந்தப் பாடலின் கருத்தைச் சாறு பிழிந்து,

பூ உறங்குது, பொழுதும் உறங்குது
நான் உறங்கவில்லை நிலவே...
கானுறங்குது காற்றும் உறங்குது
கண்ணுறங்கவில்லை...

என்று ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படப் பாடலில் கொடுத்திருந்தார். சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரும :

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலவார்
செல்வமே பேநால்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காயத்தவே

‘‘நற்கல்வி கற்ற சான்றோர்கள் நன்கு விளைந்த நெற்கதிரைப் போல தலைசாய்நது அடக்கமாக இருப்பார்கள். அதிலும் பச்சைப் பாம்பு கரு தாங்கியது போல சூலுற்று நெற்கதிராக வெளிவந்து கற்றவர் போலத் தலைசாய்ந்து இருக்கிறது’’ என்பது பாடலின் பொருள். இந்தப் பாடலின் சாற்றைப் பிழிந்து...

தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு - அதுபோல்
அறிவு .உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது ரோட்டிலே

என்று ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா’ என்ற திரைப்பாடலில் எழுதினார் கவிஞர். குறுந்தெகையில் பெண்ணின் ஏக்க உணர்வாக வரும் ஒரு பாடல்...

யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயோடு கானலகத்தே
துறைவன் நம் ஊரானே
மறை அவர்ஆகி மன்றத்தஃதே

‘காதலனே, நானோ இந்தக் கடற்கரையில் இருக்கிறேன். நீயோ கடல்மேல் சென்றுள்ளாய். என் மனமோ நாம் சந்தித்த கடற்கரைச் சோலையிலேயே இருக்கிறது. நம் காதலைப் பற்றிய செய்தியோ இந்த ஊர் முழுவதும் பரவி உள்ளதே’ என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடலினை அப்படியே உருமாற்றி...

என்னை எடுத்து தன்னைக் கொடுத்து
போனவன் போனான்டி - தன்னைக் கொடுத்து
என்னை எடுக்க வந்தாலும் வருவான்டி...
போனவன் போனான்டி

என்று ‘படகோட்டி’ படத்தின் பாடலில் அழகுறத் தந்திருந்தார் கவிஞர்.

ப்போது எதற்கு இந்த திரைப் பாடல்களின் ஆராய்ச்சி என்று நினைக்கிறீர்கள், இல்லையா... காரணம் இருக்கிறது. சென்ற வாரம் பேருந்தில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் ஒருவர் தன் ஐந்து வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை அருகிலுளளவர்களைப் பார்த்து சிரித்தது, பேசியது. பின் ‘வொய் திஸ் கொலை வெறிடி’ என்று தமிங்கிலீஷில் பாடியது. 

திடுக்கிட்டுப் போன எனக்கு, சங்ககாலப் பாடல்களை திரை இசையுடன் கலந்து கொடுத்த அந்த மகத்தான கவிஞர்களின் நினைவு வந்தது. இன்றைய திரை இசை இருக்கும் ஸ்டைலில் இப்படி சங்கப் பாடல்களின் சாறைக் கலந்து கொடுக்க வாய்ப்பு இல்லா விட்டாலும், நல்ல தமிழிலாவது எழுதித் தொலைக்கலாமே... ஏன் இப்படி ரணகொடூரமான தமிங்கிலீஷில் எழுதி வதைக்க வேண்டும், என்ற வருத்தம்தான் என்னுள். (உங்களைத் தவிர) யாரிடம் சொல்லி அழ...?

இதுபோன்ற பாடல்களைக் கேட்டு வளரும் பிற்காலத் தலைமுறைக்கு ‘நேத்து ராத்திரி யம்மா...’ என்ற போன தலைமுறைக் குத்துப்பாடல்கூட இலக்கியமாகத் தோன்றுமோ என்னமோ... ஒண்ணும் சொல்றதுக்கில்ல...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக